டெல்லி: லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பான்சரிலிருந்து டவ் நிறுவனத்தை வெளியேற்றியாக வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் இது தொடர்பாக பலமுறை சர்வதேச கமிட்டிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதை நிராகரித்து வந்தது.
டவ் எதிர்ப்பு ஏன்?
இந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு பல்லாயிரம் பேர் பலியாகக் காரணமான நிறுவனம் யூனியன் கார்பைடு. போபாலின் பாதிப்பும் இன்னும் போகவில்லை.. பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவியும் இன்னமும் கிடைக்கவில்லை. இந்த யூனியன் கார்பைடின் நிறுவனங்களில் ஒன்றுதான் டவ் கெமிக்கல்ஸ்.
டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிறுவனங்களில் ஒன்று, இதற்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, போபால் விஷவாயு சம்பவத்துக்கும் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை என்றே வாதிட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அரசின் தலையீடு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.