
கடந்த 2011ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 200 மற்றும் 1,600 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்கள் வென்றவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சீதா சாஹு(15). அவரது தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது.
இந்நிலையில் சீதா மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் சாலையோரம் பானி பூரி விற்கிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று மத்திய பிரதேச சமூக நீதி அமைச்சர் கோபால் பார்கவா அறிவித்திருந்தார். அதன்படி சீதாவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை இன்றுவரை சீதாவுக்கு வழங்கப்படவில்லை.
குடும்ப கஷ்டத்தால் தான் சாலையோரம் பானி பூரி விற்பதாக சீதாவின் தாய் கிரண் கண்ணீருடன் தெரிவித்தார். சீதா ஏதென்ஸ் கிளம்பும் முன்பு மத்திய பிரதேச முதல்வர் சிவ் ராஜ் சிங் சவ்கான் அவரை சந்தித்து உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.