
ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது இந்திய அணியினருடன் இணைந்து நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிவப்பு நிற டாப்ஸில் முதல் வரிசையில் அணிவகுத்து நடந்து வந்தார் இந்தப் பெண். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இவர் யார் என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் நேற்று இவர் குறித்த விவரங்கள் தெரிய வந்தன. இவரது பெயர் மதுரா நாகேந்திரா. பெங்களூரைச் சேர்ந்தவர். அங்குள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். நடனம் தெரிந்தவர். இவர் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இயக்குநர் டேணி பாயிலின் நேரடி மேற்பார்வையில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதாவது நடனம் ஆடியுள்ளார். இதற்காகவே அவர் லண்டன் சென்றிருந்தார்.
போன இடத்தில், ஆர்வக் கோளாறால், இந்திய அணியின் வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து அணிவகுப்பில் நடந்து வந்துள்ளார். அதேசமயம், இவர் அணிவகுப்பு நடந்த இடத்தில் ஊடுறுவிச் செல்லவில்லை. முறையான பாஸுடன்தான் இவர் சென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால், இந்திய அணியினரோடு இணைந்து நடந்து போய் விட்டார்.
இதுகுறித்து மதுராவின் தந்தை நாகேந்திரா கூறுகையில், டேணி பாயில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடத்தான் எனது மகள் போயிருந்தார். அவர் அணிவகுப்பில் ஊடுறுவிச் செல்லவில்லை. அவர் அப்போது மைதானத்தில்தான் இருந்தார். இந்திய அணியினர் வந்தபோது ஆர்வத்தால் அவரும் உடன் போயுள்ளார். இருப்பினும், நமது அணியினரின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். நானும் லண்டனில்தான் இருந்தேன். சனிக்கிழமைதான் திரும்பி வந்தேன். எனது மகள் அடுத்த இரண்டு நாட்களில் வரவுள்ளார் என்றார் நாகேந்திரா.
இவர் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பனசங்கரி பகுதியில் வீடு உள்ளது. இவருக்கு மொத்தம் 3 மகள்கள். அதில் 2வது மகள்தான் மதுரா.