லாசான் (சுவிட்சர்லாந்து): ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இராக்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள லாசான் நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சீனாவில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கும் பெய்ஜிங் ஒலிம்பிக்சில் இராக்கில் இருந்து இரண்டே வீரர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடகளப் போட்டிகளில் மட்டும் இராக் பங்கேற்கவுள்ளது. வில் வித்தை, ஜூடோ, படகுப் போட்டி, பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு இராக் விடுத்த கோரிக்கையை காலம் கடந்துவிட்டதாகக் கூறி சர்வதேச கமிட்டி நிராகரித்துவிட்டது. கடந்த மே மாதம் இராக்கின் ஒலிம்பிக் கமிட்டியை புதிய இராக்கிய அரசு கலைத்தது. இதையடு்த்து அந்த நாட்டின் மீது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பழைய உறுப்பினர்கள் கொண்ட அதே ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்க வேண்டும் என இராக்குக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டது. ஆனால், அந்த உறுப்பினர்களில் 2 பேர் கடத்தப்பட்டுவிட்டதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தரவை ஏற்க முடியாது என இராக் கூறி வந்தது. இதையடுத்து ஒழுங்காக தேர்தல் நடத்தி புதிய ஒலிம்பிக் கமிட்டியை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு இராக் ஒப்புக் கொண்டதையடுத்து இப்போது தடை நீக்கப்பட்டுள்ளது.