டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து இந்திய வீரர், வீராங்கனைகளிடம் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்துள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்ற இந்திய அணியின் பயிற்சித் துவங்குவதில் தாமதம் நீடிக்கின்றது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதன் விளம்பரத்தாராக 'டவ்' நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயு கசிவு விபத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் வாங்கி உள்ளது. போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வாங்கப்படாத நிலையில், டவ் நிறுவனம் ஒலிம்பிக் போட்டியின் விளம்பரத்தாரராக இருப்பதற்கு இந்திய எதிர்ப்பு தெரித்து வருகின்றது.
ஒலிம்பிக் போட்டியின் விளம்பரத்தாராக உள்ள டவ் நிறுவனத்தை நீக்கும் வகையில், இந்தியா ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்ற மூத்த இந்திய வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் பங்கேற்க, இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹாக்கி பயிற்சி நேற்று பெங்களூரில் துவங்க இருந்தது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து முடிவு வெளியாகாத நிலையில் அதற்கான பயிற்சி துவங்க தாமதமாகி வருகின்றது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து அதில் விளையாட உள்ள வீரர், வீராகணைகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து இந்திய வீரர், வீராங்கனைகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர்களின் எண்ணம் பொறுத்து மத்திய அரசின் முடிவு அமையும். ஒலிம்பிக் விளம்பரத்தாரராக உள்ள டவ் நிறுவனத்தை நீக்க ஒலிம்பிக் கமிட்டி மறுத்தால், அதற்கு ஏற்ற பதிலடி கொடுக்க மத்திய அரசிடம் இன்னொரு திட்டம் உள்ளது. ஆனால் தற்போது அது குறித்து எதுவும் கூற முடியாது. இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, இந்திய ஹாக்கி அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டவ் நிறுவனம் மூலம் எழுந்துள்ள பிரச்சனையால், இந்திய வீரர்களும், ரசிகர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.