
லண்டன் ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி கோலகலமான துவக்க விழாவுடன் துவங்கியது. அதன்பிறகு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 204 நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டு போட்டிகளில் 81 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 17 நாட்கள் நடைபெற்ற 30வது ஒலிம்பிக் போட்டி, இன்று அதிகாலை நிறைவு விழாவுடன் முடிவு அடைந்தது.
அமெரிக்கா, சீனா நாடுகள் இடையே துவக்கம் முதலே பதக்கங்கள் வெல்லுவதில் கடும் போட்டி நிலவியது. இதில் ஒலிம்பிக் போட்டியின் முடிவில் அமெரிக்க, ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. சீனா 2வது இடத்தை பிடித்தது. இந்தியாவிற்கு 6 பதக்கங்கள் கிடைத்தது.
இந்த நிலையில் ஒலிம்பிக் துவக்க விழா போலவே, இன்று காலையில் நடைபெற்ற நிறைவு விழாவும் கோலகலமாக இருந்தது. உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பார்வையாளர்கள் முன்னிலையில், ஒலி-ஒளி கலவையில் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
உலக பிரபல பாடல் குழுவினரான ஸ்பைஸ் கேர்ள்ஸ், கார்களில் வந்து மேடையில் தோன்றி நடனத்துடன் பாடிகளை பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பிரபல இயக்குனர் கிம் காவின் குழுவினரின் சிறப்பான அரங்க அமைப்பு மற்றும் ஒளி-ஒலி அமைப்பு, இங்கிலாந்து கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் பண்டைய இங்கிலாந்து கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், 'ஏ சிம்பனி ஆப் பிரிட்டிஷ் மியூசிக்' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 380 பள்ளி குழந்தைகள், 3,500 சேவை பணியாளர்கள் உட்பட மொத்தம் 4,100 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறைவு வரையுள்ள ஒருநாள் வாழ்கை பயணத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.
பிரபல பாடகர் இமிலி சான்டே ஒரு செய்தித்தாள் ஏற்றி வந்த டிரக்கில் வந்து, 'இதை பற்றி படியுங்கள்' என்ற பாடலை பாடினார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வில்ஸ்டன் சர்ச்சில் போன்ற உருவில் தோன்றிய நபர், பிரபல எழுத்தாளர் ஷேக்ஸ்பியரின் 'த டெம்பஸ்ட்' என்ற கவிதையை வாசித்தார்.
30 ஜிம்னாஸ்டிக் கலைஞர்கள் தலையில் முடிசூடிய தொழில்அதிபர்களின் வேஷத்தில் வந்து தங்களின் கலை திறன்களை வெளிப்படுத்தினர். முன்னதாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கடைசி போட்டியாக நடைபெற்ற ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக்யூஸ் ரோக் பதக்கங்களை வழங்கினார்.
நிறைவு விழாவில் இங்கிலாந்தின் பிரபல பாடகர் ஜார்ஜ் மைக்கேல், 'ப்ரீடம் 90' மற்றும் 'வெயிட் லைட்' ஆகிய பாடல்களை பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவின் இறுதிக்கட்டத்தில் 3 நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. இதில் ஒலிம்பிக் போட்டியின் தாய்நாடான கிரீஸ், போட்டி நடைபெற்ற நாடான இங்கிலாந்து, மற்றும் அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள பிரேசில் ஆகிய நாடுகளின் கொடிகள் இடம் பெற்றன. மேலும் மேற்கண்ட நாடுகளின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்பட்டது.
நிறைவு விழா இறுதி நிகழ்ச்சியாக வண்ண மையமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.