
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நராங் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
மொத்தம் 6 சுற்றுகள் கொண்ட 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் 60 முறை சுடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். தகுதி சுற்றுப் போட்டியில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் 47 வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்றனர்.
இதில் அபினவ் பிந்த்ரா துவக்கத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்தார். முதல் சுற்றில் 7 முறை 10 புள்ளிகள் வட்டத்தில் சுட்ட அபினவ் பிந்த்ரா 99 புள்ளிகளை பெற்றார். 2வது சுற்றிலும் 99 புள்ளிகளை எடுத்தார். ஆனால் 3வது சுற்றில் 100 புள்ளிகளை சேர்த்தார். போட்டியின் 6 சுற்றுகளின் முடிவில் அபினவ் பிந்த்ரா 600க்கு 594 புள்ளிகளை பெற்றார்.
போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீரரான ககன் நராங், முதல் சுற்றில் 10 குண்டுகளையும் 10 புள்ளிகள் வட்டத்தில் சுட்டார். இதேபோல 2வது சுற்றிலும் 10 குண்டுகளையும் 10 புள்ளிகள் வட்டத்தில் சுட்டார். இதன் மூலம் 2 சுற்றுகளில் 200 புள்ளிகளை பெற்றார். 3வது சுற்றில் 9 குண்டுகளை 10 புள்ளிகள் வட்டத்திற்கு சுட்டார். போட்டியின் 6 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் ககன் நராங், 600க்கு 598 புள்ளிகளை பெற்றார்.
உலக சாதனை:
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியின் தகுதி சுற்றில் சிறப்பாக புள்ளிகளை சேர்த்த இத்தாலி வீரர் நிக்கோலோ கம்பிரியானி மற்றும் ரோமனியாவின் அலின் ஜார்ஜ் ஆகியோர் 599 புள்ளிகளை பெற்றனர். இதில் நிக்கோலோ 60 வாய்ப்புகளில் 56 குண்டுகளை 10 புள்ளிகள் வட்டத்திற்கு சுட்டு உலக சாதனை படைத்தார்.
6 சுற்றுகளின் முடிவில் முதல் 8 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவின் ககன் நராங்(598 புள்ளிகள்) 3வது இடத்தை பிடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆனால் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா 594 புள்ளிகளுடன் 16வது இடத்தை பிடித்து, தகுதி சுற்றுடன் வெளியேறினார்.