பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொடக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அணிகளின் அணிவகுப்பு நடைபெறும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் இந்த தொடக்க நிகழ்ச்சியை டிவி மூலம் கண்டுகளிப்பார்கள். அதேசமயம், 91 ஆயிரம் பேர் நேரடியாக தொடக்க விழாவை கண்டுகளிப்பார்கள். இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தேசியக் கொடியை ஏந்தியபடி தலைமையேற்று செல்வார். இந்தியாவின் சார்பில் மொத்தம் 56 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கின்றனர். தடகளம், துப்பாக்கிச் சுடுதல், டென்னிஸ், வில்வித்தை, ஜூடோ, இறகுப் பந்து, குத்துச்சண்டை, துடுப்புப் படகு, நீச்சல், மல்யுத்தம், பாய்மரப்படகு ஆகிய பிரிவுகளில் இந்தியா பங்கேற்கிறது. நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அன்றைய தினமே நிறைவு விழா நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை மாலை 5.30 மணி முதலே தூர்தர்ஷனில் கண்டுகளிக்கலாம். ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா.. ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 8 தங்கப் பதக்கங்களை (1928 முதல் 1980 வரை-அனைத்துமே ஹாக்கியில்) பெற்றுள்ளது. நான்கு வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. 1980ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் இடையே வெகு தூரமாகி விட்டது. ரத்தோர், 2004ம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றதே இந்தியா பெற்ற கடைசிப் பதக்கமாக உள்ளது.