புதுடில்லி: சர்வதேச போட்டிகளில் இந்தியர்கள் மட்டுமே இந்தியா சார்பில் விளையாட முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இதுவரை இந்திய வம்சாவளி வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இதனால் அமெரிக்க குடியுரிமையுடன் இந்தியாவுக்காக விளையாடி வந்த பிரகாஷ் அமிர்தராஜ், சுனிதா ராவ் போன்றவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருப்பது அவசியம் என அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள ஜூனியர் ஸ்குவாஷ் வீரர் ஹர்ம் குமார், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொண்டு அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே சீரான முடிவு எடுக்கும்படி இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது.
இதன் முடிவில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் இந்திய குடிமகன்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள டென்னிஸ் வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், வீராங்கனைகள் சுனிதா ராவ், ஷிகா ஓபராய், நேகா ஓபராய் மற்றும் ஹர்ம் குமார் ஆகியோர் இந்தியா சார்பில் விளையாட தடை ஏற்பட்டு உள்ளது. விஜய் அமிர்தராஜ் மகனான பிரகாஷ் அமிர்தராஜ் டேவிஸ் கோப்பை போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
வேண்டாம் அமெரிக்கா!:
இந்தியாவுக்காக விளையாட விரும்புவதால், அமெரிக்க குடியுரிமையால் கிடைத்த பாஸ்போர்ட்டை தூக்கி எறிய தயாராக இருப்பதாக டென்னிஸ் வீராங்கனை ஷிகா ஓபராய் தெரிவித்துள்ளார்.
"இந்தியாவுக்காக விளையாட எதையும் செய்ய நான் தயார். எனக்கு அமெரிக்க குடியுரிமை வேண்டாம். பிறப்பால் இந்தியரான நான் இனி வசிக்கப்போவதும் இந்தியாதான்" என்கிறார் ஷிகா.
இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு:
இந்நிலையில் இந்த முடிவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்திய குடியுரிமையும், பாஸ்போர்ட்டும் வைத்திருப்பது அவசியமில்லை என அந்த அமைப்பின் தலைவர் ரந்தீர் சிங் தெரிவித்துள்ளார்.