சிட்னி: ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங், சர்வதேச டுவென்டி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.மேலும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் முழு கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.திங்கள்கிழமை தனது முடிவை அவர் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 10, 12 நாட்களாகவே ஆஷஸ் தொடர் தோல்வி குறித்தும், எனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் சிந்தித்தபடி இருந்தேன். அதன் இறுதியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்தேன்.கிரிக்கெட் விளையாட்டில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வகையிலேயே டுவென்டி 20 போட்டிகளிலிருந்து விடுபட முடிவு செய்தேன் என்றார்.வழக்கமாக டுவென்டி 20 போட்டிகளில், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் நோக்கில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து பல முன்னணி வீரர்கள் ஓய்வு பெறுவது சமீபத்திய டிரென்டாக உள்ளது. ஆனால் அதிலிருந்து வித்தியாசமாக டுவென்டி 20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பான்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.