
இந்தியாவின் மூத்த வட்டு ஏறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா(30). லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இவர், கடந்த 3ம் தேதி தனது கணவரும் பயிற்சியாளருமான வீரேந்தர் உடன் லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ள பாசில்டன் ஸ்போட்டிங் கிராமத்தில் தற்போது கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து கிருஷ்ண பூனியா கூறியதாவது,
நாங்கள் லண்டனுக்கு முன்கூட்டியே வர வேண்டும் என்று முன்பே தீர்மானித்துவிட்டோம். இதற்காக லண்டன் ஒலிம்பிக்கில் நான் பங்கேற்க உள்ள போட்டி துவங்க ஒரு மாதத்திற்கு முன்பே, நான் லண்டனுக்கு வந்து மேற்கொள்ளும் பயி்ற்சி திட்டம் குறித்து விளையாட்டு துறையிடம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே காலநிலையில் வேறுபாடு உள்ளது. இதனால் இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நாம் மாறுவது கடினம். எனவே ஒரு மாதம் முன்னதாகவே லண்டனுக்கு வந்து பயிற்சியில் ஈடுபட தீர்மானித்தோம்.
பல நாடுகளை சேர்ந்து முன்னணி விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இருந்து நான் மட்டுமே வந்துள்ளேன் என்றார்.
வட்டு ஏறிதல் போட்டியில் உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள கிருஷ்ண பூனியா, அதிகபட்சமாக 64.74 மீட்டர் வீசியுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு ஏறிதல் போட்டி, வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவுடன் லண்டனில் பயிற்சி மேற்கொண்டு வரும் கிருஷ்ண பூனியா, கடந்த 3 மாதங்களாக அமெரிக்கா மற்றும் போர்லாந்தில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.