
டிஸ்கஸ் த்ரோ எனப்படும் வட்டு எறிதல் போட்டியில் கிருஷ்ண பூனியா நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். பதக்கம் வெல்வது என்பது மிக மிக கடினம் என்ற போதிலும் லேசான ஒளிக் கீற்றாக பூனியா மட்டுமே தென்படுகிறார்.
தடகளப் பிரிவில் இந்தியாவிலிருந்து இந்த முறை 14 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் பூனியா மீது மட்டுமே நம்பிக்கை ஓரளவு உள்ளது.
கடந்த சில காலமாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 64.76 மீட்டர் என்ற தேசிய சாதனையை வைத்துள்ளார். ஆனால் உலக அளவில் ஒப்பிடுகையில் பூனியா 9வது இடத்தில்தான் வருகிறார்.
ரஷ்யாவின் தார்யா பிஸ்சல்நிக்கோவ் 70.69 மீட்டர் வரை இந்த ஆண்டு வீசி சாதனை படைத்தவர் ஆவார். அதேபோல ரஷ்யாவின் நதீன் முல்லர், குரோஷியாவின் சான்ட்ரா பெர்கோவிக், சீனின் லீ யான் பெங் ஆகியோரும் பூனியாவுக்கு முன்பு பெரும் சுவர்களாக உள்ளனர். இவர்களில் லீ யான் பெங் உலக சாம்பியனும் கூட.
பூனியாவின் வாய்ப்புகள் குறித்து அவரது கணவரும், பயிற்சியாளருமான வீரேந்தரர் பூனியா கூறுகையில், முன்பு சில தவறுகளை கிருஷ்ண பூனியா செய்து வந்தார். தற்போது அதை சரி செய்து கொண்டுள்ளார். எனவே இந்த
முறை அவரால் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
மகளிர் டிஸ்கர் த்ரோ போட்டியில் பங்கேற்கும் இன்னொரு வீராங்கனை சீமா அன்டில் ஆவார்.
ஆடவர் பிரிவில் விகாஸ் கெளடா இருக்கிறார். ஆனால் பதக்கம் வெல்லும் நம்பிக்கையில் இவர் இல்லை. முதல் ஆறு இடத்திற்குள் வருவதே தனது லட்சியம் என்று இவர் கூறியுள்ளார்.
இப்போதைக்கு கிருஷ்ண பூனியா மீது மட்டுமே பெரும் நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம் அவர் சாதிக்கிறாரா என்று.