க்ரைஸ்ட்சர்ச்: பயிற்சியும், நியூசிலாந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவில் மாற்றி கொள்ளும் இந்திய வீரர்களின் முயற்சியும் அணியின் வெற்றிக்கு உதவும் என இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.இந்திய அணி நியூசிலாந்தில் 48 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டொன்டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டொன்டி-20 போட்டி வரும் 25ம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது.இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மும்பையில் இருந்து ஹாங்காங் வழியாக நேற்று நியூசிலாந்து சென்று சேர்ந்தது. மழை மற்றும் வீரர்களின் லக்கேஜ் வருவதில் ஏற்பட்ட சில குளறுபடி காரணமாக வீரர்கள் ஆக்லாந்தில் இருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு கிளம்புவதற்கு 3 மணி நேரம் தாமதமானது.இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய கேப்டன் டோணி கூறுகையில்,கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடினோம். அதை இந்த ஆண்டும் தொடர முயற்சிப்போம். நியூசிலாந்து அணியில் தனியாக பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் அவர்கள் ஒர் அணியாக அபாரமாக விளையாடுவார்கள். அது தான் அவர்களின் பலம்.இது மிகவும் சவாலான தொடர். வானிலையின் இடையூறு இல்லாமல் இருந்தால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தொடராகவும் அமையும்.இத்தொடரிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். இத்தொடருக்காக கடுமையாக பயிற்சி செய்துள்ளோம். சில திட்டங்களும் வகுத்துள்ளோம். ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை தொடரில் கிடைத்த அனுபவம் உதவும்.இத்தொடரின் வெற்றிக்கு பயிற்சியும், நியூசிலாந்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவில் மாற்றி கொள்ளும் வீரர்களின் முயற்சியு்ம் அதிகம் உதவும். இங்குள்ள மைதானங்கள் பேட்டிங் சொர்க்கபுரியாக இருந்தாலும் சரி அல்லது பவுலர்களுக்கு உதவும் களமாக இருந்தாலும் சரி. இங்குள்ள சூழ்நிலைகளை பழக முதல் 7 நாள் முக்கியமானது என்றார் டோணி.டோணி கீப்பிங்கில் குறை:முன்னதாக டோனியின் கீப்பிங்கில் குறைபாடு இருப்பதாக இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக கருதப்படும் சையத் கிர்மானி குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,டோனியின் கீப்பிங்கில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகளை மறந்துவிட்டார். விக்கெட் கீப்பருக்கு மிகவும் அவசியமான அன்னிச்சையாக செயல்படும் வேகம் அவரிடம் குறைந்துவிட்டது. வயது அதிகரிப்பதன் காரணமாக இது போன்ற பிரச்சினை எழலாம். கடந்த 4 ஆண்டுகளாக அவர் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். டோனி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டொன்டி-20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். அவர் அதிக போட்டிகளில் விளையாடுவதால் கீப்பிங் திறமை மேலும் பாதிக்கப்படலாம். தற்போது இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. டோனி ஒரு கேப்டன் என்ற முறையில் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். நியூசிலாந்து தொடருக்கு பிறகு இந்தியா நம்பர் ஒன் அணியாக உருவெடுக்கும் என்றார் கிர்மானி.