
துருக்கியில் 33வது உலக மருத்துவம் மற்றும் சுகாதார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் இடம்பெற்ற 22 போட்டிகள் நடத்தப்பட்டது. 47 நாடுகளை சேர்ந்த 2,300க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியாவை சேர்ந்த மேஜர் டாக்டர் சுரேந்திர பூனியா பங்கேற்று பவர் லீப்டிங் போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகளில் கலந்து கொண்டு தலா 1 தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 400, 1,500, 5 ஆயிரம் மீ்ட்டர் கிராஸ் கன்ட்ரி ஓட்டம் மற்றும் பென்டதலான் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட பூனியா 5 வெள்ளிப்பதக்கங்களை வென்றார்.
இவரது விளையாட்டு திறனை பாராட்டும் வகையில், குடியரசு தலைவர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பூனியாவை, குடியரசு தலைவர் பாராட்டி கவுரவித்ததாக, குடியரசு தலைவர் மாளிகை செய்தியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையின் பாதுக்காவல் படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் பூனியா, 3வது முறையாக சர்வதேச அளவிலான போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு லாஸ் பால்மஸ் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றார்.
அவரது விளையாட்டுத் திறனை பாராட்டி இந்த ஆண்டுக்கான விஷிஷ்த் சேவா பதக்கத்தை குடியரசு தலைவர் வழங்கினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற கிராமத்தை சேர்ந்த பூனியா, புனேயில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றவர்.