பெய்ஜிங்: மழை காரணமாக லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடிக்கும், ரோஜர் பெடரர் ஜோடிக்கும் இடையிலான காலிறுதி ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்று அந்த ஆட்டம் நடைபெறுகிறது.
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டப் போட்டி நேற்று நடந்தது. இதில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடியும், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்-ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா ஜோடியும் மோதின.
முதல் செட் ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பயஸ்-பூபதி ஜோடி 1-4 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது.
நிறுத்தப்பட்ட ஆட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில்வெற்றி பெற்றால் பதக்கச் சுற்றான அரை இறுதிக்குள் இந்திய ஜோடி நுழையும்.
துப்பாக்கி சுடும் போட்டி: நரங்-ராஜ்புத் தோல்வி:
50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் மற்றும் சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினர்.
கடந்த 12ம் தேதி நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ராவுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியுற்ற ககன், இன்று 50 மீட்டர் ரைபிள் பிரிவில் கலந்து கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டம் அவரை தொடர்ந்ததால் இன்றைய போட்டியிலும் அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார்.
இன்றைய போட்டியில் அவர் தகுதிச் சுற்றில் 35வது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல சஞ்சீவ் ராஜ்புத்துக்கும் (இதுதான் இவருக்கு முதல் ஒலிம்பிக்) இன்றைய நாள் நல்ல நாளாக இல்லை. அவரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.
இரு வீரர்களும் அடுத்து 17ம் தேதி நடைபெறவுள்ள 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்) பிரிவில் கலந்து கொள்ளவுள்ளனர்.