டெல்லி: ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி வருகிற 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பீஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ரத்தோர் 2004ம் ஆண்டு ஏதென்சில் நடந்த ஒலிம்பிக்கில் டபுள் டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவரை கௌரவிக்கும் விதமாக தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.