சென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைக்க தான் தயாராக உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கென் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
இந்திய டென்னிஸ் வீரர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டமானது. வீரர்கள் சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல் நாட்டுக்காக விளையாட வேண்டும். போட்டிக்கு போகும் வீரர்களை அந்தந்த விளையாட்டு சங்கம் தான் தேர்வு செய்யுமே தவிர விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்யாது. தற்போது டென்னிஸ் வீரர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் லண்டன் ஒலிம்பிக்கிற்கு ஒரு அணிக்குப் பதில் 2 அணிகளை அனுப்பலாமே என்று யோசனை கூறியுள்ளேன்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வழக்கமாகச் செல்லும் 50 வீரர்களுக்கு பதில் இந்த ஆண்டு 76 வீரர்கள் செல்கிறார்கள். அவர்களுடன் 100 பயிற்சியாளர்களும் லண்டன் செல்கிறார்கள். இதற்காக மட்டும் மத்திய அரசு ரூ. 260 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இம்முறை இந்திய வீரர்கள் தங்கம் உள்பட பல பதக்கங்களை வெல்வார்கள்.
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஆனால் விளையாட்டு வீரர்களை பாரத ரத்னா விருதுக்கு மத்திய அரசு நேரடியாகத் தேர்வு செய்யாது. வீரர்களின் பெயர்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தான் பரிந்துரைக்க வேண்டும். அதை விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரதமருக்கு பரிந்துரைக்கும்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பாரத ரத்னா விருதுக்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயரைப் பரிந்துரைத்தால் அவர் பெயரை பிரதமரிடம் பரிந்துரைக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இறுதி முடிவை பிரதமர் தான் அறிவிக்க வேண்டும் என்றார்.