பெங்களூர்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தகுதி சுற்றுடன் வெளியேறினார். அபினவ் பிந்த்ரா அணிந்த கண்ணாடியை நீக்குவதற்காக, அவர் செய்து கொண்ட சிகிச்சையினால், ஒலிம்பிக் பதக்கம் இழந்தார் என்று பெங்களூரை சேர்ந்த கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் அபினவ் பிந்த்ரா, தகுதி சுற்றில் 16வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய ஒலிம்பிக் வாரியம், அபினவ் பிந்த்ராவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து யோசித்து வருகிறது. இந்த நிலையில் அபினவ் பிந்த்ரா அணிந்திருந்த கண்ணாடியை நீக்குவதற்காக, அவர் செய்து கொண்ட கண் சிகிச்சையினால், அவர் பதக்கம் இழந்தார் என்று பெங்களூரை சேர்ந்த கண் அறுவை சிகிச்சையாளர் டாக்டர் ஆஸ்லே தாமஸ் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஒன் இந்தியா செய்தியாளரிடம் கூறியதாவது,
அபினவ் பிந்த்ரா அணிந்திருந்த கண்ணாடியை அகற்றும் வகையில், கண்ணில் லேசர் சிகிச்சை செய்தார். இதனால் அவரது கண்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது, ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.
கண்களுக்கான சிகிச்சைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக செய்ய கூடாது. ஒரு நபருக்கு சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு, அவரது தொழில், சார்ந்திருக்கும் துறை, வாழ்க்கை முறை ஆகியவற்றை கண் டாக்டர்கள் கேட்டறிய வேண்டும். இவற்றை விசாரிக்காமல் கண் சிகிச்சைகள் மேற்கொண்டால், சிகிச்சை 100 சதவீதம் வெற்றி பெறும். ஆனால் சில நபர்களுக்கு அந்த சிகிச்சையினால் பெரிய அளவிலான இழப்புகள் ஏற்படும்.
அபினவ் பி்ந்த்ராவை பொறுத்த வரை அவர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் துவக்கம் முதலே, கண்ணாடி அணிந்து செயல்பட்டுள்ளார். இதனால் அவரது கை, மூளை, கண் ஆகிய உறுப்புகள் இடையிலான உறவு சிறப்பாக அமைந்து வெற்றிகளை தந்தது.
ஆனால் அவர் கண்ணாடி அணிவதை தவிர்த்த போது, கை, மூளை, கண் ஆகிய உறுப்புகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இதனால் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க தவறினார். இதனால் சிகிச்சை மேற்கொள்ள வரும் நபர்களை குறித்து தெளிவாக அறிந்த பிறகு, கண் மருத்துவர்கள் சிகிச்சையை துவக்க வேண்டும் என்றார்.