
டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை உயர்த்த வேண்டும், பயணம், தங்கும் இடங்களில் சிறப்பு வசதிகள் செய்து தர வேண்டும், யார் யாருடன் விளையாடுவது என்பதை வீரர்களே முடிவு செய்ய வேண்டுன் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மூத்த வீரர்களான சோம்தேவ், மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா, விஷ்ணுவர்தன், பாம்ப்ரி, சனம்சிங் திவிஜ் சரண், சகேத் ஆகியோர் எழுப்பியிருந்தனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் டெல்லியில் நடைபெறும் டேவிஸ் கோப்பையைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக பரிசீலித்த டென்னிஸ் சங்கம், சில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. ஆனால் தங்களஅனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றியாக வேண்டும் என்பதில் வீரர்கள் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட விரும்புவோர் விருப்பம் தெரிவிக்க காலக் கெடுவும் விதிக்கப்பட்டது. ஆனால் மூத்த வீரர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் லியாண்டர் பெயஸ், வி.எம்.ரஞ்சித், விஜயந்த் மாலிக், புராவ் ராஜா ஆகியோரும் விளையாடாத கேப்டனாக எஸ்.பி.மிஸ்ராவும், பயிற்சியாளராக ஜீஷன் அலியும் நியமிக்கப்பட்டனர். போர்க்கொடி தூக்கிய 8 வீரர்களுக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய- ஒசியானா குரூப்-1 ஆட்டத்தில் இந்தியா- தென் கொரியா அணிகள் மோதும் ஆட்டம் டெல்லியில் பிப்ரவரி 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த வீரர்களை புறக்கணித்துவிட்டு இரண்டாம் தர அணியை தேர்வு செய்து அறிவித்ததற்கு சோம்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாங்கள் எழுப்பியுள்ள பிரச்சனை மிகவும் முக்கியமானது என்பதாலே இதுவரை இல்லாத வகையில் டென்னிஸ் வீரர்கள் ஒன்றாக இணைந்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே வீரர்களுடனான பிரச்சினையை தீர்க்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் சிறப்பு கமிட்டியை அமைக்க முடிவு செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்படுகிறது.