அகமதாபாத்: 2வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 1 இன்னிங்ஸ் 90 ரன் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இந்திய- தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் 2வது டெஸ்டில் இந்தியாவை 1 இன்னிங்ஸ் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முன்னிலை வகிக்கிறது. முன்னதாக, சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் ஸ்டேடியத்தில் 2வது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3ம் தேதி தொடங்கியது. டாஸை வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்து முதல் இன்னிங்ஸில் 76 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 494 ரன்கள் எடுத்தநிலையில் டிக்ளேர் செய்தது. 333 பந்துகளில் 217 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 418 ரன்கள் பின்தங்கிய நிலையில் மூன்றாம் நாளான இன்று காலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக்கும், வாசிம் ஜாபரும் ஜோடியாக களம் இறங்கினர். எடுத்த எடுப்பிலேயே 2 சிக்ஸர், 1 பவுண்டரி என்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார் சேவாக். ஆனால், அணியின் எண்ணிக்கை 31 ஆக இருந்தபோது நிடினி பந்துவீச்சில் சேவாக் எல்பிடபிள்யூ ஆகி மீண்டும் ரசிகர்களை ஏமாற்றினார். அவர் 17 ரன்கள் எடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ஜாபருடன் திராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை 64க்கு உயர்த்தியபோது மோர்கெல் பந்துவீச்சில் டிவில்லியர்சிடம் கேட்ச் கொடு்த்து திராவிட் அவுட்டானார். இவரும் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள். அடுத்ததாக வி.வி.எஸ்.லட்சுமண் வந்தார். சிறிது நேரத்திலேயே ஜாக் காலீஸ் வீசிய பந்தை ஜாபர் ஓங்கி அடிக்க பந்து நேர்த்தியாக சென்று டிவில்லியர்சின் கைகளுக்குள் அடங்கியது. ஜாபர் 19 ரன்கள் எடுத்தார். டாப் ஆர்டர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தநிலையில் இந்திய ஸ்கோர் 70/3. 4வது விக்கெட்டுக்கு லட்சுமணுடன் கங்குலி ஜோடி சேர்ந்து நிதானமாக அடி ரன்களை குவித்தனர். இந்தநிலையில் மழையின் உபகாரத்தால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது. அப்போது 22 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்களை லட்சுமண் எடுத்திருந்தார். 16 பந்துகளில் 1 பவுண்டரி உள்பட 10 ரன்களை கங்குலி எடுத்திருந்தார். இந்தநிலையில் வழக்கத்துக்கு முன்பாக மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 125 ரன்களை ஸ்கோர் எட்டியபோது 35 ரன்கள் எடுத்திருந்த லட்சுமண் மோர்கெல் பந்துவீ்ச்சில் பவுச்சரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு கங்குலியுடன் டோணி ஜோடி சேர்ந்தார். இந்தநிலையில் கங்குலியும், டோணியும் தென்ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து ஆடத் தொடங்கினர். ஆளுக்குத் தலா 4 பவுண்டரிகளை விளாசியதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அணியின் ஸ்கோர் மளமளவென்று உயரத் தொடங்கியது. 69 ஓவரில் 235 ரன்களை எட்டியபோது ஸ்டெயின் பந்துவீச்சில் பவுச்சரிடம் கேட்ச் கொடுத்து கங்குலி அவுட்டானார். கங்குலி 149 பந்துகளில் 87 ரன்களை எடுத்திருந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். 6வது விக்கெட்டுக்கு டோணியுடன் இர்பான் பதான் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் அவர் நன்றாக ஆடியதால் அணியின் சரிவை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் நம்பினர். டோணி அரைசதம் போட்டார். 52 ரன்கள் எடுத்த நிலையில் நிடினி பந்து வீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 268. இத்துடன் இன்னிங்ஸ் தோல்வியை இந்தியா தவிர்க்கும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்த, கும்ப்ளே 5 ரன்கள், ஹர்பஜன் சிங் 4 ரன்களில் அவுட்டானார்கள். கடைசி விக்கெட்டுக்கு விளையாடிய ஸ்ரீசாந்த் ஒரே ஓவரில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் அடித்து சிறிது களிப்பூட்டினார். அவரை 17 ரன்களுக்கு நிடினி போல்டு செய்தார். இந்த இன்னிங்சிலும் பதான் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். அவர் 77 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 43 ரன்களை எடுத்திருந்தார். இந்தநிலையில் இந்தியா 328 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியாவின் இரண்டு இன்னிங்ஸ் ஸ்கோரையும் கூட்டினால் தென்ஆப்பிரிக்காவைவிட 90 ரன்கள் பின்தங்கியே இருந்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவிடம் 1 இன்னிங்ஸ் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக இரட்டை சதம் அடித்த தென்ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஸ்டெய்ன், நிடினி தலா 3 விக்கெட்டுகள், மோர்கெல் 2 விக்கெட், காலிஸ் மற்றும் ஹாரிஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் ஸ்டெயின் 5 வி்க்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டி கான்பூரில் நடக்கிறது.