டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ள இந்திய ஹாக்கி அணிக்கு, சகாரா இந்தியா பரிவார் நிறுவனம் ரூ.1.16 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க உள்ள அணிகளின் தகுதிச் சுற்று போட்டிகளில் இந்தியா ஆண்கள் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்திய அணிக்கு மத்திய பிரதேசம், ஹரியானா மாநில அரசுகள், ஹாக்கி இந்தியா, லலீத் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் உட்பட பலத்தரப்பினரிடம் இருந்து பரிசுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இந்திய ஹாக்கி அணியின் விளம்பரத்தாரரான சகாரா இந்திய பரிவார் நிறுவனம் மொத்தம் ரூ. 1.16 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.
இதன்படி போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்தார் சிங்கிற்கும், இறுதிப்போட்டியில் 5 கோல்களை அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சந்தீப் சிங் ஆகியோருக்கு தலா ரூ.11 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது.
அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ.5 லட்சம் வீதமும், அணியின் பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸூக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட உள்ளது. அணியின் வளர்ச்சியில் உறுதித் துணையாக இருந்த பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகைக்கான வரிகளை சகாரா நிறுவனமே செலுத்த உள்ளது.
இது குறித்து சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதோ ராய் கூறியதாவது,
ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் மூலம் நாடு பெருமை அடைந்துள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் அணியில் நாங்கள் பங்கு வகிப்பதில் பெருமை அடைகின்றோம்.
இந்திய வீரர்களின் பெரிய சாதனைகளுக்கு தற்போது அளித்துள்ள பரிசுத் தொகை முன்பணம் போன்றது. இந்திய அணி பெரியளவிலான சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.