பெய்ஜிங்: ஒலிம்பிக்சில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிச் சுடும் வீரர் ராஜ்யவர்தன் ரத்தோர் டபுள் டராப் போட்டியின் தகுதிச் சுற்றிலேயே வெளியேறிவிட்டார். கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிசில் இந்தியாவுக்கு பதக்கம் (வெள்ளி) கிடைக்க காரணமாக இருந்த ரத்தோர் தான் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் இந்தியக் கொடியை ஏந்தி நம் நாட்டு அணிக்கு தலைமை தாங்கிச் சென்றார். நிச்சயம் பதக்கம் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டார். நேற்று அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றபோது, ரத்தோர் மூலமாக இன்னொரு பதக்கமும் நிச்சயம் என நாடே எதிர்பார்த்தது. ஆனால், இன்று நடந்த டபுள் ட்ராப் துப்பாக்கிச் சுடுதலின் தகுதிச் சுற்றில் கூட ரத்தோர் வெல்லவில்லை. 3 தகுதிச் சுற்றுக்களில் அவர் மொத்தம் 131 ஷாட்கள் சுட்டு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார். துப்பாக்கி சுடுதல்-சம்ரேசும் வெளியேறினார்: இதற்கிடையே 50 மீ்ட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் சம்ரேஷ் ஜுங்கும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டரான சம்ரேஸ், துப்பாக்கி சுடுதலில் கடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். ஆனால், பெய்ஜிங்கில் தகுதிச் சுற்றிலேயே வெளியேறிவிட்டார். இந்தப் போட்டியில் 42 இடத்தைத் தான் அவரால் பிடிக்க முடிந்தது. 50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சம்ரேஷ் ஜங் 600க்கு 540 ஷாட்கள் சுட்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார். எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை - ரத்தோர்: பதக்க கனவு பறி போன நிலையில் கண்ணீர் மல்க காணப்பட்ட ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது எதிர்காலம் குறித்து நிச்சயமாக தெரியவில்லை என்று சோகத்துடன் குறிப்பிட்டார். பெருகி வந்த கண்ணீரை அடக்கியபடி அவர் கூறுகையில், மீண்டும் நான் போட்டிகளில் விளையாடுவேனா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னரே என்னால் சரிவர விளையாட முடியவில்லை. எனவே மறுபடியும் போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து நான் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளேன். சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன். குடும்பத்துடன் செலவிடப் போகிறேன். இந்த விளையாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். இதை விட்டு விட்டு என்னால் இருக்க முடியும் என நினைக்கவில்லை. அவ்வளவு சீக்கிரம் என்னால் ஷூட்டிங்குக்கு குட்பை சொல்ல முடியாது. இருப்பினும் ஓய்வு குறித்து நான் சிந்திக்க வேண்டிய கட்டம் வந்து விட்டதாக நினைக்கிறேன் என்றார். அப்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இதையடுத்து சட்டென்று எழுந்து உடை மாற்றும் அறைக்குப் போய் விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த ரத்தோர் தனது பேட்டியைத் தொடர்ந்தார். ஏதென்ஸ் போட்டிக்குப் பிறகு எனக்கு சில தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தன. அந்த சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். என்னால் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள்தான் வளர்த்தார்கள். இன்று நான் நன்றாகத்தான் சுட்டேன். ஆனால், இலக்கை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. கடந்த பத்து நாட்களாகவே இதுகுறித்து நான் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்னால் சரியாக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பது எனக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது. கடந்த முறையை விட இந்த முறை நான் மோசமாகவே செயல்பட்டேன். எனது தோல்வி வருத்தத்தை தந்தாலும், நமது நாட்டுக்காக அபினவ் பிந்த்ரா தங்கம் பெற்றுத் தந்துள்ளார். அது எனக்கு திருப்தி தருகிறது என்றார் ரத்தோர்.