
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களின் நாட்டிற்காக விளையாட உள்ளனர். ஆனால் பாஸ்போர்ட், குடியரிமை இல்லாத ஒரு நபர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
சூடான் நாட்டை சேர்ந்த அகதியான குயர் மரியல். 28 வயதான இவர் ஒரு சிறந்த மாரத்தான் ஓட்டப்பந்தயம் வீரர். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வீரர்களை அனுப்ப சூடான் நாடு மறுத்துவிட்டது. இதனால் அவரால் சூடான் குடியரிமை வைத்து கொண்டு, விளையாட முடியாது.
அமெரிக்காவில் வாழ்ந்துள்ள அவருக்கு முழு குடியரிமை இல்லாததால், அந்த நாட்டிற்காகவும் குயர் மரியல் விளையாட முடியாது. இந்த நிலையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் களமிறங்க தீர்மானித்த குயர் மரியல், அதற்காக மனுவை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த மனுவை பரிசீலித்த சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு, குயர் மரியல் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து குயர் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து குயர் மரியல் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க எனக்கு அனுமதி கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. எனவே ஒலிம்பிக் போட்டிக்காக உற்சாகமாக பயிற்சி செய்து வருகிறேன்.
சூடானில் நடைபெற்ற இனப்போரில் எனது குடும்பம் மற்றும் உறவினர் என்று மொத்தம் 28 பேர் பலியாகிவிட்டனர். இதனால் சூடான் நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை வெறுத்தேன். எனவே தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, இறந்த எனது உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.
எனது குடும்பத்தினரின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறேன். குடும்பத்தினரின் பிரிவால் மாரத்தான் போட்டியில் ஓடுவதை வெறுத்தேன். ஆனால் தற்போது எனது வாழ்க்கையை பாதுகாக்க ஓடுகிறேன் என்றார்.