
கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.
இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. இதையடுத்து அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கெய்ல்(ஜி.ஏ.ஐ.எல்.) அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கென் கூறுகையில்,
இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற சாந்தியின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. சாந்திக்கு மீண்டும் பாலின சோதனை நடத்த வேண்டும். அந்த சோதனையின் முடிவு அவருக்கு சாதகமாக இருந்தால் அவர் இழந்த பதக்கங்கள், சான்றிதழ்களை திரும்பப் பெற்றுத் தர அரசு துணையாக இருக்கும்.
தென்னாப்பிரிக்கா எப்படி அந்நாட்டு தடகள வீராங்கனை செமன்யாவுக்கு ஆதரவாக இருந்ததோ அதேபோன்று நாங்களும் சாந்திக்கு ஆதரவளிப்போம். இந்த விவகாரத்தை இந்திய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் ஆகியவற்றுக்கு எடுத்துச் சென்று சாந்தியின் பதக்கங்களை திரும்பப் பெற வழிவகை செய்வோம். அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க விரும்பினால், அதற்கும் உதவுவோம் என்றார்.
தற்போது மீண்டும் சாந்திக்கு பாலின சோதனை நடத்தப்பட்டாலும் அதன் முடிவு எப்படி இருந்தாலும் என்.ஐ.எஸ். (National institute of sports) கோச்சிங்கில் சேர அவருக்கு இடம் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.