இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு வசதி குறைவா?- விளக்கம் கேட்டு மத்திய விளையாட்டு துறை 'நோட்டீஸ்'
டெல்லி: லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய வீரர்களுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று இந்திய பளுதூக்குதல் வீரர் பர்மான் பாஷா, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கனுக்கு புகார் அனுப்பி இருந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
பாராலிம்பிக்ஸ் போட்டியில் நான் விளையாட வேண்டும் என்பதற்காக, எனது மனைவி அன்டோனியா தனது நகைகள் அனைத்தையும் விற்று பணத்தை திரட்டி தந்துள்ளார். போட்டிகளில் எனக்கு உதவி செய்ய எனது மனைவியும் அதிக விருப்பத்துடன் இருந்தார். ஆனால் விளையாட்டு கிராமத்திற்குள் வர எனது மனைவிக்கு பாஸ் வழங்கப்படவில்லை.
இந்திய பாராலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள், வீரர்களின் உதவியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பாஸ்களை, விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கி உள்ளனர். இதனால் விளையாட்டு வீரர்களுக்கு உதவியாளர்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பர்மான் பாஷாவின் புகாருக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு, விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேக்கன், இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் மீது எழுந்துள்ள புகாருக்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட காலகெடுவிற்குள் விளக்கம் அளிக்கவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் நிர்வாகிகள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தகுந்த நேரத்தில் வழங்கப்படவில்லை. அரசு நினைவுபடுத்திய பிறகு தான் நிதி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை. இதனால் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அளித்த புகாருக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனி உதவியாளர்களை நியமிப்பது முடியாத காரியம். போட்டியில் கலந்து கொள்ளும் 10 வீரர்களுக்கு 6 உதவியாளர்களை மட்டுமே பாராலிம்பிக் போட்டி கிராமத்திற்குள் அனுமதிக்க முடியும். போட்டி கிராமத்திற்குள் காலத்திற்கு முன்னமே வந்துவிட்டு, நீண்டநேரம் அங்கு நேரத்தை கழிக்கின்றனர். இது குறித்து கண்காணித்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications