ஸ்ரீசாந்த் உள்பட 14 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்

ஸ்பாட் பிக்ஸிங் புகார் தொடர்பாக இந்த 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் வீரர்கள் மற்றவர்கள் புக்கிகள் ஆவர். அனைவரும நேற்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 நாள் போலீஸ் காவல் கோரி காவல்துறை தரப்பில் மனு செய்யப்பட்டது.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 மொபைல் போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் பெரும் நெட்வொர்க்காக செயல்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மேலும் பல தகவல்களைப் பெற வேண்டியுள்ளது. பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. எனவே 7 நாள் காவல் அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினார். இருப்பினும் 5 நாள் காவலை நீதிபதி லோகேஷ் குமார் சர்மா அனுமதித்து உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடி, குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதியிடம் ஸ்ரீசாந்த்தின் வக்கீல் கூறுகையில், எனது கட்சிக்காரருக்கு போலீஸ் காவலில் பாதுகாப்பு குறித்து சந்தேகமாக உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதி, போலீஸ் காவலில் உங்களது கட்சிக்காரருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் வேறு எங்குமே அவருக்கு பாதுகாப்பு இருக்காது. அவருக்கு என்ன இசட் பிளஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறுகிறீர்களா என்று திருப்பிக் கேட்டார்.
மே 21ம் தேதி வரை ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவர்.


Click it and Unblock the Notifications