''நல்லவரா.. கெட்டவரா''...- சர்ச்சை நாயகன் ஸ்ரீசாந்த்!
சென்னை: இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைத்த வித்தியாசமான வீரர் ஸ்ரீசாந்த். அருமயான வேகப் பந்து வீச்சாளராக அறிமுகமான இவர் படு வேகத்தில் அதல பாதாளத்திற்குப் போனவர். தன்னைச் சுற்றிலும் ரசிகர்களை விட சர்ச்சைகள் அதிகம் சுற்றியிருக்கும்படி விட்டு விட்டதால் வீழ்ந்து போன ஒரு பந்து வீச்சாளர்.
வேகப் பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லாமல் தடுமாறும் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கத் தவறியவர். பல்வேறு கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்கியவர்.
இன்று மிகப் பெரிய புகாருக்குள்ளாகி கைது வரை போய் விட்டார் ஸ்ரீசாந்த். இது கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபகாலத்தில் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரர் இப்படிப்பட்ட புகாருக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும்.
ஸ்ரீசாந்த் குறித்த சர்ச்சைகளின் தொகுப்பு இதோ....

2010ல் தென் ஆப்பிரிக்காவில் சண்டை
2010-11 ல் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி டூர் போயிருந்தபோது தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்துக்கும், ஸ்ரீசாந்த்துக்கும் இடையே மோதல் வெடித்தது. வார்த்தைச் சண்டையில் ஈடுபட்டார் ஸ்ரீசாந்த்.

சண்டை போட்டாலும் வெற்றி தேடித் தந்தார்
ஸ்மித்துடன் சண்டை போட்டாலும் அடுத்தடுத்து முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார் ஸ்ரீசாந்த். இருப்பினும் தவறு அவர் பக்கமே அதிகம் இருந்தது தெரிய வந்தது.

தட்டி எழுப்பியதற்கு நன்றி
இதுகுறித்து அவர் பின்னர் கூறுகையில், என் பக்கம் தவறு இருந்தாலும் கூட என்னை வேகமாக பந்து வீச தூண்டுவித்தார் ஸ்மித். இதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

டோணியிடம் திட்டு
ஆனால் கேப்டன் டோணியிடம் அவருக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. ஸ்ரீசாந்த்தை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்றும், இந்தியாவுக்கு ஸ்லோ ஓவர் ரேட் கிடைக்க ஸ்ரீசாந்த்தே காரணம் என்றும் விமர்சித்தார் டோணி.

மாத்யூ ஹெய்டனிடம் மோதல்
2009 ஐபிஎல் தொடரின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மாத்யூ ஹெய்டனுக்கும், ஸ்ரீசாந்த்துக்கும் இடையே உரசல் வெடித்தது. ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் தொடர்ந்து 3 சிக்ஸர்களை ஹெய்டன் விளாச, கடுப்பான ஸ்ரீசாந்த், வார்த்தையை விட்டார். இதனால் கோபமடைந்த ஹெய்டன், ஸ்ரீசாந்த்தை கடுமையாக விமர்சித்தார்.

சைமண்ட்ஸுடன் மோதல்
2007 டூரின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார் ஸ்ரீசாந்த்.

2008ல் கன்னத்தில் அடி
2008 ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்பஜன் சிங்கிடம் போய் ஏதோ பேச, கடுப்பான ஹர்பஜன், ஸ்ரீசாந்த் கன்னத்தில் விட்டார் ஒரு அறை.

சாதனையும் படைத்தவர்
சர்ச்சைகள் மட்டும்தான் ஸ்ரீசாந்த்தின் உடமை என்று சொல்ல முடியாது. சாதனையும் இவர் வசம் இருந்தது. கேப்டவுனில் 2011ல் நடந்த டெஸ்ட் போட்டியின்போது ஐந்து விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் ஸ்ரீசாந்த். கேப்டவுனில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் ஐந்து விக்கெட் வீழ்த்தியது அதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications