பெய்ஜிங்: ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனூப் ஸ்ரீதர் தோல்வியுற்று ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். முதல் சுற்றில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறிய அனூப், 2வது சுற்றில் வலிமையான ஜப்பான் வீரர் ஷோஜி சாடோவை சந்தித்தார். இபப்போட்டியில், முழங்கை வலியால் அவதிப்பட்ட நிலையில் விளையாடிய அனூப், 13-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். 37 நிமிடங்களில் இப்போட்டி முடிவுக்கு வந்தது. ஆடவர் பேட்மின்டன் பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீரர் அனூப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியிலிருந்தும் அனூப் ஸ்ரீதர் வெளியேற்றப்பட்டுள்ளார். போன்சா அவுட்: ஆடவர் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ரேஹான் ஜஹாங்கீர் போன்சா தோல்வியுற்றார். மொத்தம் 44 பேர் பங்கேற்ற இப்போட்டியில் 40வது இடத்தைப் பெற்றார் ரேஹான். இப்போட்டியின் தகுதிப் பிரிவில் கடைசி சுற்றில் பங்கேற்றார் போன்சா. நான்கு பேர் பங்கேற்ற இப்பிரிவில் 2வது இடத்தைப் பிடித்தார் போன்சா. இதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 2 நிமிடங்கள் 1.89 விநாடிகளாகும். முன்பு இவர் 2 நிமிடம் 1.40 விநாடிகளில் இத்தூரத்தைக் கடந்துள்ளார். தனது நேரத்தை கூட இவரால் முறியடிக்க முடியவில்லை அல்லது சமப்படுத்த முடியவில்லை. போட்டிக்கு வருவற்கு முன்பே, ஒலிம்பிக்கில் நான் நீந்துவது இதுவே முதல் முறை. எனவே இதை நல்ல பயிற்சிக் களமாகவே கருதுகிறேன். எனது கவனமெல்லாம் 2010ல் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் சாதனை செய்ய வேண்டும் என்பதுதான் என்று கூறியிருந்தார். வில்வித்தையிலும் ஏமாற்றம்: மகளிர் வில் வித்தையிலும் இந்தியாவுக்கு இன்று தோல்விமுகம்தான். போம்போய்லா தேவி மற்றும் டோலா பானர்ஜி ஆகியோர் தகுதிச் சுற்று போட்டிகளில் பின்னடைவை சந்தித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினர்.