
உலக கால்பந்து அணிகளில் மிகவும் பிரபலமானது போர்ச்சுகல். இந்த அணியின் கிளப்பிற்காக பல பிரபல கால்பந்து வீரர்கள் விளையாடி உள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் பிகோ, நானி ஆகியோர் போர்ச்சுகல் கிளப் அணிக்காக விளையாடியவர்களில் பிரபலமானவர்கள்.
இந்த நிலையில் கால்பந்து உலகில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய அணியை சேர்ந்த சுனில் செட்ரிக்கு, போர்ச்சுகல் கிளப்பிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சுனில் செட்ரி நேற்று கையெழுத்திட்டார். போர்ச்சுகல் கிளப்பிற்காக விளையாடுவதன் மூலம் உலகின் பல முன்னணி கால்பந்து வீரர்களுடன் சுனில் செட்ரிக்கு தொடர்பு கிடைக்கும். இதன் மூலம் மற்ற இந்திய வீரர்க்கும் சிறந்த பயிற்சியை கிடைக்க வாய்ப்புள்ளது.
சுனில் செட்ரி முதலில் போர்ச்சுகல் கிளப்பின் பி அணிக்காக விளையாடுவார். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஸ்போர்ட்டிங் டி போர்ச்சுகல் அணியில் சுனில் செட்ரி சேர்த்து கொள்ளப்படுவார். இதற்காக அவர் ஒராண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சுனில் செட்ரி கூறியதாவது,
தற்போது நான் 14வயது சிறுவன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. போர்ச்சுகல் கிளப்பிற்காக விளையாடும் நாளை எதிர்நோக்கி உள்ளேன். போர்ச்சுகல் கிளப்பிற்காக விளையாடுவதன் மூலம் எனது திறமைகளை வளர்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் கால்பந்தை பிரபலப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து உள்ளேன். உலக கால்பந்து அணிகளின் தரவரிசையில் 163வது இடத்தில் உள்ள இந்திய அணியை சேர்ந்த எனக்கு, 5வது இடத்தில் உள்ள போர்ச்சுகலை சேர்ந்த கிளப்பிற்காக ஆட அழைப்பு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
எனக்கு கிடைத்த வாய்ப்பை தகுந்த முறையில் பயன்படுத்தி, கடும் பயிற்சியின் மூலம் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அணியில் எனது நிலை குறைத்து அணியின் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் தீர்மானிப்பர் என்றார்.
கால்பந்து உலகில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்திய அணிக்கு இது போன்ற அரிய வாய்ப்பு கிடைப்பதிருப்பது இந்திய கால்பந்து ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.