
2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி உட்பட 10 மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வழக்கில் தொடர்புடைய சுரேஷ் கல்மாடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல அனுமதி கேட்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்த இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சென்று வர கல்மாடிக்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா என்பவர் பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது வாதிட்ட வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, ஊழல் வழக்கில் சிக்கியுள்ள கல்மாடி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல பொது நிதியை பயன்படுத்துகிறார். இது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணானது. மேலும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக சுரேஷ் கல்மாடியை அனுப்ப கூடாது என்றார்.
அதற்கு பதிலளித்த கல்மாடி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்ஜி, 2010 டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பான வழக்கில், கல்மாடிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சொந்த பணத்தில் தான் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார். இதற்காக இந்திய ஒலிம்பிக் கமிட்டியிடம் நிதி செலவு செய்யவில்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி, ராஜீவ் சஹாய் ஆகியோர் அடங்கிய பெஞ்சு, சுரேஷ் கல்மாடியை லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவிற்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று உத்தரவி்ட்டது. மேலும் வரும் 27ம் தேதி வரை இந்தியாவை வெளியேற கல்மாடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.