இலங்கை அணியை வெளியேற்ற கோரி தமிழர் போராட்டம்
லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் விளையாட வந்திருக்கும் இலங்கை அணியை தொடரில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என லண்டனில் கிரிக்கெட் மைதானம் முன்பு தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை துவங்குகிறது. இத்தொடரில் பங்கேற்க இலங்கை அணியும் லண்டன் வந்துள்ளது. நேற்று தென் ஆப்ரிக்காவுடன் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த அணி பயிற்சி போட்டியில் மோதியது.
இந் நிலையில் லண்டன் தமிழர்கள், இலங்கையில் மனித உரிமை அத்துமீறல் செய்து வரும் இலங்கை அரசின் வீரர்கள் கிரிக்கெட் விளையாட கூடாது. அவர்களை உடனடியாக தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரி வெல்லிங்டன் ரோட்டில் மைதானத்தின் நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர்.
அவர்கள் தங்களது கைகளில் இலங்கையின் லேட்டஸ்ட் ஸ்கோர்: 20,000 பலி. 3 லட்சம் காணவில்லை என எழுதிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
இது குறித்து போராட்டக்காரர்களின் செய்தி தொடர்பாளர் துஷ்யன் நானேகுமார் கூறுகையில்,
நாங்கள் போராடுவதற்கு இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மட்டுமே காரணம். இலங்கையில் மனித உரிமை மீறல் கொடுமைக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. இலங்கை அரசு மக்களுக்கு உதவ யாரையும் அனுமதிக்க மறுத்துவிட்டது. மீடியாக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
அங்கு மூன்று லட்சம் தமிழர்கள் முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர். சொந்த நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களை கொல்லும் ஒரு நாட்டு அணி எப்படி மற்ற நாடுகளுக்கு சென்று விளையாடுகிறது. இந்த விஷயத்தில் இங்கிலாந்தும் பாரபட்சம் காட்டுகிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி, மனித உரிமை மீறல் பிரச்சனை காரணமாக ஜிம்பாப்வேயில் சென்று விளையாடுவதை தவிர்த்துவிட்டது. இதே போல் இலங்கையுடனும் அவர்கள் விளையாட கூடாது. அவர்கள் இங்கே வருவதை நாங்கள் விரும்பவில்லை. அவர்களை உடனே வெளியேற்றுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications