பெய்ஜிங்: நம் ஊரில் 8 என்றாலே பலருக்கு எட்டிக்காயாய் கசக்கும். எட்டு என்ற எண்ணில் முடியும் எதையும் பெரும்பாலும் மறுத்துவிடுவார்கள், அதுவும் சாதாரண எண்தானே என்ற யோசனையே இல்லாமல். வாகனப் பதிவின் போது, எட்டாம் நம்பர் வராமலிருக்க லஞ்சம் கொடுக்கக் கூட தயாராக இருப்பார்கள். எட்டாம் தேதி எந்தக் காரியத்திலும் ஈடுபடாதவர்களும், எட்டு எழுத்து வருவது போல சினிமா தலைப்பு வைக்க விரும்பாதவர்களும் நிரம்பியது நம் ஊர். ஆனால் சீனர்கள் அப்படியல்ல... அவர்களுக்கு எட்டுதான் எல்லாமே. எட்டு என்ற எண்ணை அவர்கள் கடவுளாகவே வணங்குகிறார்கள். அதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளை 08.08.08 என்ற தேதியில் தொடங்க முடிவு செய்தார்கள். அது மட்டுமல்ல அந்தப் போட்டிகள் துவங்கும் நேரத்தைப் பாருங்கள்... அதுவும் சீன நேரப்படி இரவு 08 மணி 08 நிமிடம் 08 வினாடிகளில் தான் தொடங்கவுள்ளது. (இந்தியாவைவிட சீனா நேரம், 2 மணி 30 நிமிடங்கள் அட்வான்ஸ்) அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டு ஒலிம்பிக் வீரர்களின் கூட்டுத் தொகையும் எட்டு என அமையும்படி தேர்வு செய்துள்ளார்களாம். இது ஏதோ இன்று நேற்று முடிவு செய்த விஷயமல்ல... எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு செய்த போதே, இந்த தேதியையும் நேரத்தையும் சீன ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்து, அரசின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம்தான் ஆட்சியில் உள்ளதென்றாலும், மார்க்கெட் எகானமிக்கு மாறியதோடு மக்களின் பெரும்பாலான நம்பிக்கைகளில் குறுக்கே நிற்பதில்லை அரசு! ஒலிம்பிக் மெடல்களையும் எட்டு வரும்படிதான் ஜெயிப்பார்களோ...!