
மும்பையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு சிக்கி கைதாகிய ஒரே பாகிஸ்தானிய தீவிரவாதியான கசாப் கடந்த ஆண்டுதான் தூக்கிலிடப்பட்டான். இதற்கு இந்தியாவையும், இந்தியர்களையும் பழிவாங்குவோம், தலைகளைத் துண்டிப்போம் என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், இரண்டு இந்திய வீரர்களைக் கொன்றதோடு, ஒரு வீரரின் தலையையும் துண்டித்து எடுத்துச் சென்று கொடூரமாக நடந்து கொண்டது.
இந்த செயலுக்குப் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு காரணங்களை வைத்து ஒப்பிட்டுப் பார்க்கையில் இது திட்டமிட்ட செயலாகவே தோன்றுகிறது. முதல் காரணம் கசாப் மரணம் என்று வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்து கிரிக்கெட் விளையாடியது. அது விளையாடி முடித்து நாட்டுக்குக் கிளம்பிச் சென்றதைத் தொடர்ந்து தற்போது இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்.
இங்கும் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் நிலவி வந்தன. போட்டியை நடத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் கூறி வந்தன. மேலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை விட முக்கியமாக, முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் சம்பந்தி என்பதால் அவர் வரக் கூடாது என்று பிரச்சினை கிளம்பியது. இதனால் கடைசி நேரத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இப்படி அடுத்தடுத்து பாகி்ஸ்தான் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் தடைகளும், எதிர்ப்புகளும் வெடித்துக் கிளம்பியதால் பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் 2 டுவென்டி 20 போட்டிகளில் ஒன்றில் பாகிஸ்தான் வென்றது. அடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகளில் 2 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது.
இதனால் பாகிஸ்தானில், பெரும் வெற்றிக் கொண்டாட்டங்கள் எழுந்தன. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து பாகிஸ்தான் வென்றது அங்கு பெரிதாக பேசப்பட்டது. எனவே பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாட அந்தநாட்டு ராணுவம், இந்திய வீரர்களைக் கொன்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் கசாப் மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திட்டமிட்டு இவ்வாறு பாகிஸ்தான் ராணுவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.