பெய்ஜிங்: பெய்ஜிங்கில் இன்று இரவு தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வெல்வார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பில் நாடு காத்திருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கும், இந்தியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம்தான். இதுவரை நடந்த 28 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமே 8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 17 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இந்த முறை 56 வீரர், வீராங்கனைகளுடன் இந்தியா பெய்ஜிங் போயுள்ளது. இந்த முறை எத்தனை பேர் நமக்காக பதக்கங்களைப் பெற்றுத் தரப் போகிறார்கள் என்ற பேரார்வத்தில் கோடிக்கணக்கான இந்தியர்களும் காத்திருக்கின்றனர். இந்த ஒலிம்பிக்கில் எந்தெந்த வீரர், வீராங்கனைகள் மீது இந்தியாவின் கவனம் பதிந்திருக்கிறது என்பது குறித்த ஒரு அலசல் .. சானியா - லியாண்டர் - மகேஷ் பூபதி: ஒட்டு மொத்த இந்தியர்களின் கவனமும் சானியா மிர்ஸா மீதுதான். இந்திய டென்னிஸ் முகத்தை மாற்றியவர் சானியா. அவருக்கு முன்பு ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி என பலர் டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் முத்திரையைப் பதித்தவர்கள் என்றாலும், சானியா மிர்ஸாவின் வருகைக்குப் பிறகு இந்தியாவின் முகம் முற்றிலும் மாறிப் போனது என்பதே உண்மை. இந்த வகையில், சீன ஒலிம்பிக் போட்டியில் சானியா நிச்சயம் ஒரு தங்கத்தைப் பெற்றுத் தருவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இந்தியா உள்ளது. ஆனால் பெய்ஜிங் போவதற்கு முன்பே தங்கம் எல்லாம் வெல்வது சற்று கடினமான விஷயம் என்று கூறி விட்டுப் போயுள்ளார் சானியா. சானியாவுக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டி. இரட்ைடயர் பிரிவில் இந்தியாவின் சுனிதா ராவுடன் இணைந்து விளையாடவுள்ளார் சானியா. இரட்டையர் பிரிவில் சானியா-சுனிதா மூலம் பதக்கம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். லியாண்டரும், மகேஷ் பூபதியும் மீண்டும் இணைந்து விளையாடவுள்ளனர். இரட்டையர் போட்டியில் அவர்களிடமிருந்து நிச்சயம் பதக்கம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்சிலோனா ஒலிம்பிக்கில் ரமேஷ் கிருஷ்ணனுடனும், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் மகேஷ் பூபதியுடனும் இணைந்து ஆடினார் லியாண்டர். இரு போட்டிகளிலும் அவருக்கு பதக்கம் கிடைக்கவில்லை. 96 ஒலிம்பிக்கில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த முறை எப்படியும் தங்கம் வெல்வது என்ற உறுதியுடன் உள்ளார் லியாண்டர். பெருமையை இழந்த ஹாக்கி: இந்தியாவுக்கு பெரும் சோகமாக இந்த ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் இந்தியா பங்கேற்க முடியாமல் போயுள்ளது. ஹாக்கி ஒருகாலத்தில் இந்தியாவுக்கு தங்கத்தைப் பெற்றுத் தந்த ஒரே விளையாட்டாக இருந்தது. 1928ம் ஆண்டு ஒருமுறையும், பின்னர் 32 முதல் 56 வரை தொடர்ந்து தங்கத்தையும் பெற்றுத் தந்தது ஹாக்கி. அதன் பின்னர் 1964 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா ஹாக்கியில் தங்கம் வென்றது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் போய் விட்டது. அதுதான் நாம் கடைசியாக வென்ற தங்கப் பதக்கமாகும். ஹாக்கியைத் தவிர வேறு எந்த விளையாட்டிலும் நாம் முதலிடத்ைதப் பெறவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம். இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத் தந்தவர்கள் என்று பார்த்தால் ஹாக்கியைத் தவிர்த்து, பளு தூக்குதலில் கர்னம் மல்லேஸ்வரி, டென்னிஸில் லியாண்டர் பயஸ், துப்பாக்கி சுடுதலில் ரத்தோர், மல்யுத்தத்தில் ஜே.டி.யாதவ் ஆகியோர் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். தனி நபர்களில் ரத்தோர் மட்டுமே இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்ைதப் பெற்றுத் தந்துள்ளார். இந்தியா இந்த ஒலிம்பிக்கில் மொத்தம் 12 பிரிவுகளில் பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, துடுப்புப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஜூடோ, மல்யுத்தம், பாய்மரப் படகு ஆகியவற்றில் இந்தியா பங்கேற்கிறது. பளு தூக்குதல் பிரிவில் மோனிகா தேவி மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கியதால் இந்தியா அதில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது. துப்பாக்கிச் சுடுதலில் நம்பிக்கை: இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் எப்படியும் ஒரு பதக்கம் பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உலக சாம்பியன்களான அபினவ் பிந்த்ரா, மனவ்ஜித் சிங் சந்து ஆகியோரும், ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரத்தோரும் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். மொத்தம் 9 வீரர், வீராங்கனைகள் இந்தியாவுக்காக போட்டிக் களத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல, ஐந்து குத்துச்சண்டை வீரர்களும் நம்பிக்கையூட்டும் வகையில் பெய்ஜிங் போயுள்ளனர். இவர்களில் அகில் குமார், விஜேந்தர் ஆகியோர் மீது அதிக நம்பிக்கை உள்ளது. வில் வித்தையில் டோலா பானர்ஜி மீது நம்பிக்ைக உள்ளது. அதுதவிர வரதினேனி, போம்பாய்லா தேவி ஆகியோரும் நம்பிக்கையூட்டுகின்றனர். அவர்கள் மெடல் பெற்றுத் தருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தங்கத்திற்குத் தாவுவாரா அஞ்சு ஜார்ஜ்?: தடகளத்தைப் பொறுத்தவரை அஞ்சு பாபி ஜார்ஜ் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. நீளம் தாண்டுதலில் அவர் தங்கம் பெற்றுத் தருவாரா என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் உள்ளனர். சமீப காலமாக அஞ்சுவின் தாண்டுதல் பெரிய அளவில் இல்லை என்ற போதிலும் கூட அவர் மீதான நம்பிக்கை இன்னும் குறையவில்லை. பேட்மிண்டன் பிரிவிலும் இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது. அனூப் ஸ்ரீதர், சாய்னா நேஹ்வால் ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர். அதேபோல சரத் கமலும் பதக்கம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நேஹா அகர்வாலும் களத்தில் உள்ளார். மொத்தத்தில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கையை விட சிறப்பாக விளையாடுமா என்ற எதிர்பார்ப்புதான் பெருமளவில் உள்ளது. அதேசமயம், எப்படியாவது ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்ற பேராசையும் இந்தியர்களிடையே உள்ளது.