
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 24 வீராங்கனைகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களில் வருபவர்கள் மற்றும் மொத்த அட்டவணையில் தோல்வி அடைந்தவர்களில் முதல் 2 பேர் என்று மொத்தம் 8 பேர் இறுதி போட்டியில் பங்கேற்க தகுதி பெறுபவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் 2வது பிரிவில் சேர்க்கப்பட்ட இந்திய வீராங்கனை டின்டு லுகா முதலில் சிறப்பாக ஓடி வந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் சோர்ந்து போன அவர், பந்தயத்தூரத்தை 1.59.69 நிமிடங்களில் கடந்து, தனது பிரிவில் 6வது இடத்தை பிடித்தார். மேலும் மொத்த பட்டியலில் 11வது இடத்தை பிடித்தார்.
தென் ஆப்பிரிக்க வீராங்கனை கேஸ்டர் செமன்யா பந்தய தூரத்தை 1.57.67 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ரஷ்யாவின் இலினா அர்ஸாகோவா 1.58.13 நிமிடங்களில் பந்தயத் தூரத்தை கடந்து 2வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்திய வீராங்கனை 2வது பிரிவில் 6வது இடமும், மொத்த பட்டியலில் 11வது இடமும் பெற்று, அரையிறுதி போட்டி உடன் வெளியேறினார். கேரளாவை சேர்ந்த டின்டு லுகா, முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் விளையாட்டு பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.