
அமெரிக்காவில் நடைபெற்ற பஹாமா ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் தமிழக வீரர் ஜெ.அக்னீஸ்வர்(20) கலந்து கொண்டார். 200 மீட்டர் தனிநபர் மெட்லே போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
பிரஸ்ட் ஸ்டிரோக் நீச்சல் வீரர்களின் தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள அக்னீஸ்வரன், இந்த மாதம் நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பஹாமா ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். இதன் மூலம் வரும் 9ம் தேதி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய நீச்சல் அணியில் நான் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தை சேர்ந்த இளம் நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி கிடைக்கும் வகையில், சென்னையில் நீச்சல் பயிற்சி மையம் துவங்கி உள்ளோம். நம் நாட்டில் படிப்பிற்காக விளையாட்டை வீரர்கள் கைவிட வேண்டியுள்ளது. இதனால் மற்ற நாடுகளை விட நாம் விளையாட்டு துறையில் பின்தங்கி உள்ளோம்.
தமிழக அரசும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் எனது வளர்ச்சிக்காக ஊக்கம் அளித்து வருகின்றன. இதன் மூலம் வரும் 2016ம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவை அடைய முடியும் என்று நம்புகிறேன். சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு உடனடியாக பாராட்டும், விருதும் வழங்கி கவுரவித்தால், நம் நாட்டு விளையாட்டு துறை இன்னும் வளர்ச்சி அடையும் என்றார்.