டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பானில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐஓசி) 125-வது கூட்டம் ஆர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இஸ்தான்புல், டோக்கியோ இடையே கடும் நெருக்கடி காணப்பட்ட போதிலும், இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது.
ஒலிம்பிக் போட்டிகள்
உலகின் உயரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் நடக்கிறது.
2020 ஒலிம்பிக்
இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு எது என்பது, அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் பொதுக்குழு கூட்டத்தில் இந்திய நேரப்படி ஞாயிறு நள்ளிரவு முடிவு செய்யப்பட்டது.
32 வது ஒலிம்பிக் போட்டி
32வது ஒலிம்பிக் போட்டியை நடத்த இஸ்தான்புல் (துருக்கி), மாட்ரிட் (ஸ்பெயின்), டோக்கியோ (ஜப்பான்) ஆகிய நகரங்களில் நடத்த அந்தந்த நாடுகள் உரிமை கோரின. பொதுக்குழுவில் 3 நாடுகளின் குழுவினரும் கலந்து கொண்டு எந்த மாதிரி போட்டியை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என்பது குறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அடுத்தடுத்து முன்வைத்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு
இதைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் சுற்று வாக்கெடுப்பில் டோக்கியோ 42 ஓட்டுகளும், இஸ்தான்புல், மாட்ரிட் தலா 26 ஓட்டுகளும் பெற்றன. எந்தவொரு நாட்டுக்கும் வெற்றிக்கு தேவையான 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால், இரண்டாம் நிலையில் இருந்த இஸ்தான்புல், மாட்ரிட் ஆகிய நகரங்களில் எதனை வெளியேற்றுவது என்பதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இஸ்தான்புல் 49 ஓட்டுகளும், மாட்ரிட் 45 புள்ளிகளும் பெற்றன. இதன் மூலம் மாட்ரிட் வெளியேற்றப்பட்டது.
4 வது முறையாக ஜப்பான்
பின்னர் டோக்கியோ, இஸ்தான்புல் இடையே நேரடி போட்டியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை டோக்கியோ பெற்றது. டோக்கியோவுக்கு 60 வாக்குகளும், இஸ்தான்புல்லுக்கு 36 வாக்குகளுடன் கிடைத்தன. இதன் மூலம், ஜப்பான் இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது.
களைகட்டிய ஜப்பான்
2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெறும் என்று அறிவித்த மறுநிமிடமே ஜப்பானில் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி விட்டது. அணு உலை விபத்து காரணமாக, 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்னிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விளக்கமளித்தார்.