மும்பை: உலகக் கோப்பைப் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நான்கு போட்டிகள் இடம் பெறுகின்றன.இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து வருகிற 2011ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தவுள்ளன. முதலில் பாகிஸ்தானும் இந்த பட்டியலில் இருந்தது. ஆனால் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டை நீக்கி விட்டனர். பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசத்துக்குப் பிரித்துக் கொடுத்து விட்டனர்.இந்தியாவில் 29 போட்டிகளும், இலங்கையில், 12 ஆட்டங்களும், வங்கதேசத்தில் 8 போட்டிகளும் நடைபெறும்.இந்தியாவில் இறுதிப் போட்டி நடைபெறும். இதுதவிர ஒரு அரை இறுதிப் போட்டி, ஒரு காலிறுதிப் போட்டியும் இந்தியாவில் நடைபெறும்.இலங்கையில், ஒரு அரை இறுதி மற்றும் ஒரு காலிறுதிப் போட்டி நடைபெறும்.வங்கதேசத்தில் 2 காலிறுதிப் போட்டிகள் இடம் பெறும். போட்டித் தொடக்க விழாவை வங்கதேசம் நடத்துகிறது. இந்த நிலையில் மும்பையில் நடந்த உலகக் கோப்பை போட்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், போட்டிகளை எங்கெங்கு நடத்துவது என்பது இறுதி செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் விவரம்...இறுதிப் போட்டி- மும்பை.ஒரு அரை இறுதி - மொஹாலி.ஒரு காலிறுதி - அகமதாபாத்.இந்த மூன்று நகரங்களிலும் கூடுதலாக தலா 2 லீக் ஆட்டங்கள் இடம் பெறும்.சென்னை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லி, நாக்பூர் ஆகிய நகரங்களில் தலா 4 போட்டிகள் நடைபெறும். இதில் ஒரு போட்டி இந்தியா பங்கேற்பதாக இருக்கும். மற்றவை பிற நாட்டு அணிகள் கலந்து கொள்ளும் போட்டியாக இருக்கும்.உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இந்தியா தவிர தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.டெக்கானை விரட்டிய டிரினிடாட்:இந் நிலையில் ஐபிஎல் சாம்பியன் ஆன டெக்கான் சார்ஜர்ஸ் அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. டிரினிடாட்-டொபாகோ அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கானை வீழ்த்தியது.ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் நேற்று வாழ்வா, சாவா போட்டியில் சந்தித்தன. ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் கடைசிப் பந்து வரை டென்ஷனாகவே இருந்தது.முதலில் விளையாடிய டிரினிடாட் அணி 150 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அதை எடுக்க பெரும் திணறலுக்குள்ளானது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியைத் தழுவி போட்டித் தொடரை விட்டே வெளியேறியது.டிரினிடாடின் வெற்றி மற்றும் டெக்கானின் தோல்வியால், ஏ பிரிவிலிருந்து காலிறுதிக்கு சோமர்செட் அணி தகுதி பெற்றுள்ளது.டெக்கான் அணியின் கேப்டன் கில்கிறைஸ்ட் 51, வேணுகோபால ராவ் 30, ரோஹித் சர்மா 25 ரன்கள் எடுத்தனர். டிரினிடாட் அணி சார்பில் வேயன் பிரேவோ 3 விக்கெட்களை வீழ்த்தினார்.