லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக துவங்க இருக்கிறது.இரண்டாவது உலக கோப்பை டுவென்டி-20 தொடர் இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் துவங்குகிறது. மொத்தம் 12 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகின்றன.இன்று துவங்கி வரும் 21ம் தேதி வரை 17 நாட்களில் 12 லீக், 12 சூப்பர்-8, 2 அரையிறுதி, 1 பைலன் என மொத்தம் 27 போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி, வங்கதேசம், அயர்லாந்து அணிகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் போட்டி இன்று இரவு நடக்கிறது. இப்போட்டிக்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. பல முறை ஒரு நாள் தொடருக்கான உலக கோப்பை தொடர்களை நடத்திய நாடு என்பதாலும், கிரிக்கெட்டின் தாயகம் என்பதாலும் இன்றைய துவக்க விழா கொண்டாட்டங்கள் படுவிமர்சிகையாக இருக்கும் என இங்கிலாந்து போர்டு தெரிவித்துள்ளது. மேலும் வீரர்களுக்கான பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.முதல் போட்டியில் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, நெதர்லாந்துக்கு எதிராக மிகப்பெரும் வெற்றியை பெறும் எந ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோலிங்வுட், போபரா என பேட்டிங் பட்டாளம் நன்றாக இருக்கிறது. ஆனாலும், ஆல்-ரவுண்டர் பிளின்டாப் இல்லாதது மிகப்பெரும் குறை.நெதர்லாந்து கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக இருக்கிறது. 2007 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்தியா, கத்துக்குட்டி வங்கதேசத்திடமும், பாகிஸ்தான் அதிகம் பிரபலமாகாத அயர்லாந்துடன் தோற்று வெளியேறியது ஞாபகமிருக்கலாம். ஒரு நாள் போட்டியிலே இந்த நிலைமை என்றால் அதிரடி டுவென்டி-20ல் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு சிறு தவறு கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடலாம் என்பதால் ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.