டெல்லி: ஐசிசியின் கண்டிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக டுவென்டி 20 சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடர் தள்ளிப் போடப்பட்டு விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் டுவென்டி 20 சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஐசிசியின் கண்டிப்பு காரணமாக போட்டித் தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் ேசர்ந்த தலா 2 முன்னணி டுவென்டி 20 அணிகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளன. பாகிஸ்தானும் இதில் கலந்து கொள்ளும் என்று தெரிகிறது. செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை இந்தியாவில் இப்போட்டிகள் நடைபெறவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உலக அளவில் திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் அட்டவணைக்கு இந்தத் தொடரால் குழப்பம் ஏற்படும் என ஐசிசி கூறியிருந்தது. உலக கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும் அது அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து போட்டித் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளரான லலித் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டித் தொடரை நாங்கள் கைவிட்டு விடவில்லை. செப்டம்பரில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர்நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தேதி முடிவு செய்யப்படும் என்றார். இந்த ஒத்திவைப்புக்கு ஐசிசியின் கண்டிப்பு மட்டும் காரணமல்ல என்று கூறப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், போட்டிக்கான செலவில் 50 சதவீதத்ைத பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்தியா கூறுகிறது. ஆனால் இதை பல நாடுகள் ஏற்கவில்லை. மேலும், இங்கிலாந்து கவுன்டி அணிகளில் கபில் தேவ் தலைமையிலான ஐசிஎல் வீரர்கள் யாரும் இடம் பெறக் கூடாது எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்து போர்டு உடன்பட்டு வரவில்லை. இங்கிலாந்தில் உள்ள நான்கு கவுண்டி அணிகளில் ஐசிஎல் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை குழப்பங்கள் இருப்பதால்தான் சாம்பியன்ஸ் லீக் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.