
சீனாவைச் சேர்ந்த 16 வயதேயான யே ஷிவான் மகளிருக்கான 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். தனது போட்டியின்போது, கடைசி 50 மீட்டர் ப்ரீஸ்டைல் தூரத்தை அவர் 28.93 விநாடிகளில் நீந்திக் கடந்தார். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
காரணம், ஆடவர் பிரிவில் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் லோகேட் 29.1 விநாடிகள் தூரத்தில் போட்டி தூரத்தைக் கடந்ததால், சீன வீராங்கனை ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பாரோ என்று அமெரிக்கத் தரப்பு புயலைக் கிளப்பியுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் புகாரை யே மறுத்துள்ளார். நான் எந்த ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை. எனது திறமையை மட்டுமே பயன்படுத்தினேன் என்று அவர் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க நீச்சல் பயிற்சியாளர் ஜான் லியனார்ட் கூறுகையில், அமெரிக்க வீரரை விட மிகக் குறைந்த விநாடிகளில் யே கடந்தார் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. சாதாரண முறையில் இதற்கான வாய்ப்பே இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் தனது கடுமையான பயிற்சி மற்றும் முயற்சி காரணமாகவே தான் இதை சாதிக்க முடிந்தது என்பது யே முன்வைக்கும் வாதமாகும்.
இதுகுறித்து யே மேலும் கூறுகையில், சீன வீரர்களும் வீராங்கனைகளும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கடுமையான பயிற்சியை எடுப்பவர்கள். தீவிரமாக முயற்சிப்பவர்கள். அவர்களுக்கு ஊக்கமருந்துகள் தேவையில்லை. எங்களது கரங்கள் சுத்தமானவை என்றார் பட்டென்று.
அமெரிக்கா, சீனா இடையே வெடித்துள்ள இந்த ஒலிம்பிக் சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.