
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் உலகம் முழுவதும் இருந்து, மொத்தம் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, தாக்குதல் நடத்த சில தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
இதனால் ஒலிம்பிக் போட்டியின் போது, லண்டனில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ராணுவ செயலாளர்கள் கூட்டாக கலந்து கொண்டு பேட்டி அளித்தனர்.
அப்போது இங்கிலாந்து ராணுவ செயலாளர் பிலிப் ஹமோன்ட் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியை பாதுகாப்பான முறையில் நடத்த தேவையான திறமை எங்களிடம் உள்ளது. இதன் மூலம் அனைவரும் போட்டிகளை பயமின்றி கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பிற்காக, ராணுவ தனிப்படையை ஏற்படுத்தி உள்ளோம். நாங்கள் நினைத்தை விட, தனி ராணுவப்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியின் ஒவ்வொரு போட்டியிலும், கட்டத்திலும் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவப் படை திட்டமிட்டுள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியின் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமான ராணுவத்தை களமிறக்க திட்டம் இல்லை.
மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன், ஒலிம்பிக் போட்டி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். அதிக பாதுகாப்பு தேவைப்பட்டால், களமிறங்க ராணுவ வீரர்கள் தயாராக உள்ளனர் என்றார்.
இது குறித்து அமெரிக்க ராணுவ செயலாளர் லியன் பனிட்டா கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்த இங்கிலாந்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்பை உதவிகளை அளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான தகுந்த பாதுகாப்பு வசதிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றார்.