டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜய்குமார் இன்று காலையில் நாடு திரும்பினார். அவருக்கு இந்திய ராணுவத்தினர் டெல்லி விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க, தேசிய கீதம் ஒலிக்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தனது போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலையில் அவர் நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் இன்று காலையில் வந்திறங்கிய விஜய்குமாருக்கு, கம்பீர வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய ராணுவ வீரரான விஜய்குமார், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதை பாராட்டும் வகையில், விமான நிலையத்தில் ராணுவ வீரர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிரம்ஸ், பாரம்பரிய இசை கலந்து தேசிய கீதம் முழங்க, விஜய்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து இந்திய வீரர் விஜய்குமார் கூறியதாவது,
விமான நிலையத்தில் இந்திய ராணுவத்தினர் மூலம் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. இது போன்ற வரவேற்பை நான் முதல் முறையாக பெற்றுள்ளேன்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்றுள்ளதை தொடர்ந்து, சிறிதுகால ஓய்விற்கு பிறகு, வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட உள்ளேன்.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு, இந்திய விளையாட்டு துறையில் ஐஏஎஸ் அதிகாரிக்கு நிகரான பணி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பதவி உயர்வு இந்திய ராணுவம் அளிக்கும் என்று காத்திருக்கிறேன் என்றார்.
இந்திய துப்பாக்கி சங்கத்தின் ஆலோசகர் பல்ஜீத் சேதி கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள விஜய்குமாருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு உதவிகளை அளிக்க உள்ளோம். தற்போது லண்டனில் உள்ள இந்திய துப்பாக்கி சங்கத்தின் தலைவர் ரானிந்தர் சிங் நாடு திரும்பிய பிறகு, விஜய்குமாருக்கு பெரிய அளவிலான பாராட்டு விழா நடத்த உள்ளோம். மேலும் விஜய்குமார், நாட்டு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.