
25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கிச் சூட்டில் 18 வீரர்கள் பங்கேற்றனர். தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்குமார் 585 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு வந்தார். பின்னர் மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விஜய்குமார் தொடர்ந்து நன்றாக விளையாடிவந்தார். 5-வது கட்டத்தின் போது விஜய்குமாருக்குப் போட்டியாக இருந்த சீன வீரர் ஜியான் ஜங் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரஷ்யாவின் கிளிமோவும் வெளியேற விஜய்குமாருக்கான பதக்க வாய்ப்பு பிரகாசமானது.
இறுதிச் சுற்றின் முடிவில் விஜய்குமார் 30 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். கியூபா வீரர் லியூரிஸ் புபோ 34 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், 27 புள்ளிகள் பெற்ற சீனாவின் பெங் டிங் வெண்கலமும் வென்றார்.
ரூ1 கோடி
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமாருக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று இமாச்சலப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
4 பதக்கங்கள்
விஜய்குமார் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது. நடப்பு ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ககன் நரங் வெண்கலம் பெற்றுத்தந்தார். 2004-ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2008-ல் துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார்.