விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டும் வகையில், ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அர்ஜூனா விருது மற்றும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகியவை பிரபலமானவை.
இந்த நிலையில் மேற்கொண்ட விருதுகளை பெற தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்ய 5 முன்னாள் விளையாட்டு வீரர்களை கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ராத்தோர், குத்துச்சண்டை வீரர் அகில்குமார், நீச்சல் வீரர் காஜன் சிங், கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா, கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ஆகியோர் தேர்வு குழுவில் இடம் பெற்றனர்.
தேர்வுக் குழு மூலம் இந்த ஆண்டு அர்ஜூனா விருது பெற 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஹாக்கி வீரர் சர்தர் சிங், கீதா போஹத்(மல்யுத்தம்), நார்சிங் யாதவ்(மல்யுத்தம்), அனு ராஜ் சிங், ஓம்கார் சிங்(துப்பாக்கி சுடுதல்), காஷ்யப், அஸ்வின் பொண்ணப்பா(பாட்மிண்டன்), தீபிகா குமாரி, பம்பாய்லா தேவி(வில்வித்தை) உட்பட மொத்தம் 25 பேர் அர்ஜூனா விருது பெற தேர்வாகி உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற விஜய்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற தேர்வாகி உள்ளனர்.
இது குறித்து மத்திய விளையாட்டு அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பொதுவாக ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது ஆண்டுதோறும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இதில் மாற்றம் செய்யப்படலாம். இந்த ஆண்டு 2 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
அதேபோல அர்ஜூனா விருது ஆண்டுதோறும் 15 பேருக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 15க்கும் மேற்பட்டோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. காமன்வெல்த், ஆசிய போட்டிகள் ஆகியவற்றில் சிறந்த விளங்கிய வீரர்கள், வீராங்கனைகளை கருத்தில் கொண்டு, அர்ஜூனா விருதிற்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.