
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் விகாஸ் கவுடா, பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஆண்களுக்கான வட்டு எறிதலின் இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 12 வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரருக்கும், 6 முறை வட்டு வீசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி வீரர் ராபர்ட் ஹர்ட்டிங் அதிகபட்சமாக 68.27 மீட்டர் தூரம் வட்டு எறிந்து, முதலிடத்தை பிடித்து, தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஈரான் வீரர் எஷன் ஹாடாடி 68.18 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 2வது இடத்தை பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். எஸ்டோனியா வீரர் ஜெர்ட் கண்டர் 68.03 மீட்டர் வட்டு எறிந்து 3வது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
இந்திய வீரர் விகாஸ் கெளடா அதிகபட்சமாக 64.79 மீட்டர் தூரம் வட்டு எறிந்து, 8வது இடத்தை பிடித்தார். இதனால் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய வீரர் இழந்தார். முன்னதாக இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் விகாஸ் கவுடா அதிகபட்சமாக 65.20 மீட்டர் வட்டு எறிந்தது குறிப்பிடத்தக்கது.