
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகள் சிலர் ஊக்கமருந்து உட்கொள்கின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் இந்த முறை சந்தேகத்திற்கு இடமான வீரர்கள், வீராங்கனைகள், ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் முடிவு செய்துள்ளது.
இது குறித்த உலக ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் தலைவர் ஜான் பஹே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் யாராவது ஊக்க மருந்து பயன்படுத்திவிட்டு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என்று திட்டமிட்டு இருந்தால், இப்போதே போட்டிகளில் இருந்து விலகி விடுவது நல்லது. ஏனெனில் விளையாட்டு போட்டிகளின் போது, ஊக்க மருந்து பயன்படுத்தி வெற்றி பெறுவது ஒரு மோசடி திட்டம் ஆகும்.
ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தி வீரர்கள் சிக்கினால், அவர்களின் நாட்டில் இருந்து வந்துள்ள மற்ற வீரர்களுக்கும் அவமானம் ஏற்படும். மேலும் அவர்கள் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களை ஏமாற்றிவிட்டு, தங்கள் நாட்டு கொடிக்கும் அவமானமத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால் ஊக்க மருந்து இல்லாத லண்டன் ஒலிம்பிக் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். ஊக்க மருந்து பயன்படுத்தும் ஒரு வீரர் வெற்றிப் பெற முடியாது. மேலும் அப்படியே ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தி ஒரு பதக்கத்தை வென்றாலும், இது தனது உழைப்பால் கிடைத்தது என்று கூற முடியாது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியை பொறுத்த வரை, ஒரு விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை உடலில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சந்தேகத்திற்கு இடமான வகையில் உள்ள விளையாட்டு வீரர்களில், இதுவரை 6, 250 பேரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக, 20 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.