
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 80 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் இந்த முறை இந்தியாவை சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளதால், நாட்டிற்கு அதிக பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தின் சார்பாக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச் சண்டை வீரர் வீரேந்தர் சிங் மற்றும் பல இந்திய வீரர்கள் பேசினர். அப்போது வீரேந்தர் சிங் கூறுகையில், லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வெறுங்கையுடன் நாடு திரும்பமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள எங்களுக்கு, அதிக பதக்கங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெறுங்கையுடன் நாடு திரும்பமாட்டோம். அதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
விளையாட்டு வீரர்களுக்காக நம் நாடு எவ்வளவோ செலவு செய்துள்ள நிலையில், நாங்கள் ஒரு பதக்கமாவது பெற்று திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இது குறித்து பளுதூக்கும் வீரர் ரவி குமார் கூறியதாவது,
கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பளு தூக்கும் வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே கிடைத்த வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள விரும்புகிறோம்.
தற்போது நான் 360 கிலோ எடையை தூக்கி வருகிறேன். ஆனால் இன்னும் 5 கிலோ அதிகமாக தூக்கினால் கூட லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுவிடலாம். இதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.