
ஐரோப்பா நாடுகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் உக்ரைன் மற்றும் போலந்தில் நடைபெற்று வருகிறது. இன்று உக்ரைனில் உள்ள கிவ் கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் உக்ரைன், ஸ்வீடன் அணிகள் மோத உள்ளன.
சொந்த மண்ணில் களமிறங்கும் உக்ரைன் அணி அதிக பலத்துடன் இன்று செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் ஜெர்மனி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்ட 10 உக்ரைன் வீரர்களுக்கு 'புட் பாய்சன்' ஆகி பாதிக்கப்பட்டனர். இதனால் உக்ரைன் வீரர்கள் இன்னும் சோர்வாக காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் 'புட் பாய்சன்' மூலம் ஏற்பட்ட உடல்நலக் குறைவில் இருந்து உக்ரைன் வீரர்கள் மீண்டுவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஒலி பிலோகின் தெரிவித்துள்ளார்.
அனடோலி டைமோஸ்சூக், ஆன்ட்ரி ஷிவ்சின்கோ, ஆன்ட்ரி வோரோனின், ஒலிக்ஸடர் ஷோவ்கோஸ்கி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உக்ரைனில் உள்ளனர். உக்ரைன் கடைசியாக ஆடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. மற்ற 2 போட்டிகளை டிரா செய்துள்ளது.
ஸ்வீடன் அணியை பொறுத்த வரை கேப்டன் ஸ்லதன் இப்ராஹிமோடிக், உக்ரைன் அணிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்ற கருதப்படுகிறது. அவருடன் செபாஸ்டியன் லார்சன், கிம் கால்ஸ்ரோம், ஒலோப் மெல்பேர்க் ஆகியோர் இணைந்து செயல்பட்டால், வெற்றி ஸ்வீடனுக்கு தான் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்வீடன் பங்கேற்றுள்ள கடந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.
இதுவரை ஸ்வீடன், உக்ரைன் அணிகள் 3 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 1 முறை வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இரு பலமான அணிகள் மோத உள்ளதால், போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.