ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதே எனது இலக்கு-இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 13 போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 80 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி(18), கடந்த 2010ம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் கடந்த 2006 மற்றும் 2009ம் ஆண்டுகளில் வில்வித்தை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவர்.
சர்வதேச அளவில் வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள தீபிகா குமாரிக்கு, தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்பதில் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். இதற்காக எனது பயிற்சியாளர்களிடம் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
உலக தரவரிசையில் முதலிடம் பெற்றதை குறித்து நான் சிந்திப்பதில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
இது குறித்து தீபிகா குமாரியின் பயிற்சியாளர் மஹாதோ கூறியதாவது,
உலக தரவரிசையில் முதலிடத்தை பெற்றதாக நான் தீபிகாவிற்கு முதலில் அறிவிக்கவில்லை. ஏனெனில் இதனால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது சிந்தனை சிதற வாய்ப்புள்ளது என்று கருதினோம்.
ஆனால் ஊடகங்களில் தொடர்ந்து இது குறித்து செய்திகள் வந்ததால், அவரிடம் அறிவித்தேன். இதில் மகிழ்ச்சி அடைந்த தீபிகா, தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தீபிகா குமாரி எப்போதும் திருப்தி அடைவதில்லை. இதனால் அவரது வாழ்க்கையின் இலக்கு அதிகரித்து கொண்டே வந்து, தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது வரை எட்டி உள்ளது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் மகளாக தீபிகா குமாரி, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications